இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நாட்டின் நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்கு துறைசார் நிபுணர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள பாராளுமன்ற விசேட குழு தீர்மானம்

திகதி : 2023-07-20

நாட்டின் நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்கு துறைசார் நிபுணர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தீர்மானித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) சாகர காரியவசம் தலைமையில் இந்த விசேட குழு முதல் தடவையாக அண்மையில் (ஜூலை 18) பாராளுமன்றத்தில் கூடியதுடன், குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த அடிப்படை விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களை முன்மொழியுமாறு குழுவின் தலைவர் குழு உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.  

அத்துடன், எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைய நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் எதிர்க்கட்சி சார்பில் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ள நிலையில் இந்தக் குழு தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

அதற்கமைய, நாடு வங்குரோத்து நிலையை அடையும் போது நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்த பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் இந்தக் குழுவுக்கு தலைமை வகிப்பது, குழுவின் சுயாதீனத் தன்மைக்குப் பாதிப்பாகும் என்பதால் குழுவிலிருந்து இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) சாகர காரியவசம் குறிப்பிடுகையில், இந்தக் குழு அரசியல் சார்ந்த குழுவொன்று அல்ல என்றும், பிரேரணையைக் கொண்டுவரும் கட்சியிலிருந்தே தலைவர் நியமிக்கப்பட வேண்டும் சம்பிரதாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.
 
அத்துடன், பாராளுமன்ற விசேட குழுக்களை நியமிக்கும் போது சம்பிரதாயத்துக்கு அமைய குழுவின் கட்டமைப்பில் ஆளும் தரப்புக்கு அதிக பிரதிநிதித்துவமும், எதிர்கட்சிக்கு குறைந்த பிரதிநிதித்துவமும் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். குழுவின் சுயாதீனத் தன்மை, குழுவிலுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் அல்ல என்றும் குழு எவ்வாறு செயற்படுகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான, அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆரச்சி, இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.வீ. சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வாவும் கலந்துகொண்டார்.

 

1 3

5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom