இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

டிஜிட்டல் தளங்களில் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழுங்குபடுத்துவதற்கு மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான புகார் மற்றும் விசாரணைப் பொறிமுறை அவசியம் -- பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்

திகதி : 2023-03-07

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமானது (WPC) பெண்கள் மற்றும் சிறுமிகளின் நல்வாழ்வு மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக டிஜிட்டல் தளங்களில் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழுங்குபடுத்துவதற்கான மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான புகார் மற்றும் விசாரணைப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கு  முன்மொழிகின்றது. 

டிஜிட்டல் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் WPC ஒரு அறிக்கையில் கூறுகின்றது.

மார்ச் 08ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி கலாநிதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முழு அறிக்கையையும் கீழே காணவும்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருகின்றோம், இது உயரிய பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரமளிப்புக்காகப் பாடுபடும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகின்றது, அதே நேரத்தில் அத்தகைய இலக்குகளை அடைவதில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கொண்டாடுகின்றோம்.

பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச தினம் தேவையற்றதாகத் தோன்றினாலும், பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுவது முக்கியமானது, அனைத்திற்கும் மேலாக, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை உணர அரசியல் விருப்பத்தையும் வளங்களையும் திரட்டுவதற்கு இது ஒரு சக்திவாய்ந்த பரிந்துரைக் கருவியாகும்.

தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கலின் முன்னேற்றத்துடன், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மாறிவிட்டன. இருப்பினும், தப்பெண்ணங்கள் மற்றும் பொதுவான நம்பிக்கைகள் 21 ஆம் நூற்றாண்டிலும் கூட, பெண்கள் தங்கள் முழுத் திறனையும் உணர்ந்து கொள்வதில் இன்னும் தடையாக இருக்கின்றன. மாறிவரும் உலகம் மற்றும் அதனுடன் கைகோர்த்து வரும் பிரச்சனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் "DigitALL: பாலின சமத்துவத்திற்கான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் (Innovation and technology for gender equality)" என்பதாகும்.

உலகளாவிய நோய்ப் பரவல் மற்றும் அதன் விளைவாக விதிக்கப்பட்ட இயக்கக் கட்டுப்பாடுகளின் பின்னணியில், தொழில்சார் வேலை, கல்வி மற்றும் சமூகச் செயல்பாடுகள் நிகழ்நிலை (ஆன்லைன்) டிஜிட்டல் உலகத்திற்கு மாற்றப்பட்டது வரை பல செயற்பாடுகள் உலகில் வாழ்க்கைப் போக்கை கடுமையாக மாற்றியது. இலங்கை உட்பட பல தொற்றுநோய்களுக்குப் பிந்தைய சமூகங்களில் நிகழ்நிலைக் கல்வி மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது இப்போது வழக்கமாகிவிட்டது. எனவே, நிகழ்நிலைக் கல்வியை எளிதாக்கும் வகையில் குழந்தைகள் இணையத்தை அணுகவும் திறன் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தவும் பெற்றோர் அனுமதித்ததனால், டிஜிட்டல் தளங்கள் மற்றும் சாதனங்களின் பயன்பாடு, குறிப்பாக குழந்தைகளிடையே கடுமையாக அதிகரித்தது.

நிகழ்நிலை மற்றும் டிஜிட்டல் தளங்கள் மற்றும் சாதனங்களின் ஒட்டுமொத்தப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக டிஜிட்டல் சாதனங்களை வாங்க இயலாமை தொடக்கம் இணைப்புச் சிக்கல்கள் வரையிலான பிரச்சனைகளினால் நாட்டின் கணிசமான பகுதியினர் இணையத்தை அணுகுவதிலிருந்து முற்றிலும் தடுக்கப்படுகின்றார்கள். அதேசமயம் நிகழ்நிலைக் கல்வி புதிய விதிமுறையாக மாறியுள்ள நிலையில் இது குறிப்பாக குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. ஒரு குடும்பம் ஒரு சாதனத்தை மட்டுமே வாங்கக்கூடிய சந்தர்ப்பங்களில், பாரபட்சமான நம்பிக்கைகளின் காரணமாக, பெண் குழந்தையை விட ஆண் குழந்தைக்கு சாதனத்தைப் பயன்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. தொடர்பு சாதன வலையமைப்புக்கள்  மற்றும் தரவுகளை அணுகுவதில் பெண்கள் எதிர்நோக்கும் மட்டுப்பாடுகள் காரணமாக, பெண்கள் ஆண்களை விட குறைந்த அளவான இணையவழி அறிவினை கொண்டவர்களாக உள்ளனர்.

இருப்பினும், அதையும் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், இணையம் மிக எளிதாக வன்முறை மற்றும் துன்புறுத்தலைப் பரப்பும் ஊடகமாக மாறிவிடும். இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி (SLCERT) மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) ஆகியவற்றுக்கு துன்புறுத்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் பெற்றோர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் ஒரு தொற்றுநோய் ஒன்றினால் பாதிக்கப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் மிக உயர்ந்த எண்ணிக்கையை  எட்டியுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்களும் சிறுமிகளும் தான்.

எனவே, டிஜிட்டல் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே உருவாக்குவது இன்றியமையாததாகும்.

மேற்கூறியவற்றைக் கருத்திற் கொண்டு, இணையத்திற்கான மேம்பட்ட அணுகலுக்கான வளங்களைத் திரட்டுவதற்கும், டிஜிட்டல் பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கான விதிமுறைகளை மேம்படுத்துவதற்கும் கலந்துரையாடல்களைத் தொடங்குவதற்கான முயற்சிகளை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமானது வலுப்படுத்தியுள்ளது. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், டிஜிட்டல் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை ஊக்குவிக்கும், பாதுகாக்கும் மற்றும் ஆதரிக்கும் ஒரு செயற்படுத்தும் சூழலை உருவாக்குவதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமானது உறுதியாக உள்ளது.

 

1 7

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom