இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நாட்டில் தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவதற்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் முன்மொழிவை சமர்ப்பிக்கவும் - நிர்வாக சேவைச் சங்கத்துக்கு பாராளுமன்ற விசேட குழு அறிவிப்பு

திகதி : 2023-03-03

இந்நாட்டில் தொழில்முயற்சிகள் மற்றும் முதலீடுகளை ஆரம்பிக்கும் போது பிரதேச செயலகம் உள்ளிட்ட பொதுநிர்வாகக் கட்டமைப்பில் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு 'இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு', இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்துக்கு அண்மையில் (28) அறிவித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே தலைமையில் அண்மையில் (பெப். 28) பாராளுமன்றத்தில் கூடிய இந்தக் குழு முன்னிலையில் இலங்கை நிர்வாக சேவைச் சங்கம், இலங்கை கணக்காய்வாளர் சேவைச் சங்கம், இலங்கை திட்டமிடல் சேவைச் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கமைய, இந்நாட்டில் புதிய தொழில்முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆரம்பிக்கும் போது பொதுநிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பில் முதலீடுகள் அல்லது தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு செய்யவேண்டிய நடவடிக்கைகள் வினைத்திறன்மிக்கதாக இல்லை என்பதால் பல்வேறு முதலீட்டு மற்றும் வணிக சந்தர்ப்பங்கள் நாட்டுக்கு கிடைக்காமல் போவதாக குழு சுட்டிக்காட்டியது. மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட நிர்வாகக் கட்டமைப்பிலுள்ள முகாமைத்துவ கொள்கைகள் நிகழ்காலத்துக்கு பொருத்தமானதாக தயாரிக்கப்பட வேண்டும் என குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

அதற்கமைய, அரச கொள்கைத் தயாரிப்பின் போது இது தொடர்பான நிலையான புதிய கொள்கைகளை தயாரிப்பதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தற்பொழுது நாட்டில் 332 பிரதேச செயலகங்கள் காணப்படுவதாகவும், அவற்றின் செயற்பாடுகளை கண்காணிக்கும் முறைமையொன்று இல்லாமை கடுமையானதொரு குறைபாடு என இங்கு கலந்துரையாடப்பட்டது. முதலீட்டாளர்களின் வசதி கருதி முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து துரித சேவையை வழங்க ஒவ்வோர் மாவட்ட செயலகங்களிலும் பிரத்தியேகமான அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டது. அதேபோன்று, அந்த அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பொதுநிர்வாகக் கட்டமைப்பில் மறுசீரமைப்புகள் மேற்கொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய நிர்வாக சேவைச் சங்கம், எதிர்காலத்தில் நிர்வாக மறுசீரமைப்புகளுக்காக பிரத்தியேகமான அமைச்சொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரேரித்தது.

அதேபோன்று, அனைத்து பிரதேச செயலாளர்களையும் அழைத்து அவர்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடத்துவது தொடர்பிலும் இதன்போது முன்மொழியப்பட்டது.  

பிரதேச செயலகங்கள் ஊடாக முதலீடுகளுக்கான காணிகளை பெறும்போது ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரியளவில் காணி மோசடிகள் இடம்பெறுவதாகவும் அது தொடர்பில் விரைவாகத் தலையிடுவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, முக்கியத்துவம் வழங்கப்படவேண்டிய முதலீடுகள் தொடர்பிலும், முதலீட்டுத்துறையில் இந்நாட்டில் காணப்படும் சாத்தியக்கூறுகள் எவை என்பதை கண்டறிவதற்கும் கவனம் செலுத்துவதன் அவசியம் பற்றி இலங்கை கணக்காய்வாளர் சங்கத்தினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ லலித் வர்ணகுமார ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom