இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையில் வழங்கப்படும் இலவசக் கல்வி தொடர்பில் தென்கொரிய பல்கலைக்கழக மாணவர்கள் வியப்படைந்ததாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தெரிவிப்பு

திகதி : 2023-08-17

இலங்கையில் வழங்கப்படும் இலவசக் கல்வி பற்றிக் கேள்வியுற்றதும் தாம் வியப்படைந்ததாகவும், இவ்வாறு வழங்கப்படும் இலவசக் கல்வி மூலம் உருவாக்கப்படும் மாணவர் தலைமுறை இலங்கையைக் கட்டியெழுப்புவதில் சிறப்பான பங்களிப்பை ஆற்றுவார்கள் என நம்புவதாகவும் தென் கொரிய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் குழு தெரிவித்தது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் கொரிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (ஆக. 17) பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களைப் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தனர்.

வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கே தென்கொரியாவில் முற்றிலும் இலவசமான கல்வி வழங்கப்படுவதாகவும், இருந்தபோதும் இலங்கையில் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை மாணவர்கள் இலவசமாகக் கல்வியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் பிரதி சபாநாயகரிடம் தெரிவித்தனர்.

நுவரெலியா சாந்திபுர கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சிறுவர்களுக்கான தன்னார்வ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்கொரியாவின் பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.

இலங்கையில் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி குறித்து அவர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், அது தொடர்பில் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ பதில்வழங்கினார்.

தென்கொரியாவில் உள்ள ஜொன்ஹாம், தேகு, சொம்முங் போன்ற பல்கலைக்கழங்களைச் சேர்ந்த மாணவ பிரதிநிதிகளே இவ்வாறு தெரிவித்தனர்.

நுவரெலியா சாந்திபுர பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலம் தங்கியிருக்கும் இந்த மாணவர்கள் கலாசார நிகழ்ச்சிகளை நடாத்துதல், சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான சில பயிற்சிகளை வழங்குதல், பாடசாலை கட்டடங்களைச் சீர்செய்தல், உடல் ஆரோக்கிய நிகழ்ச்சிகளை நடத்துதல், விளையாட்டு போட்டிகளை நடத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கை பாடசாலை மாணவர்களுக்குத் தென்கொரிய பல்கலைக்கழக மாணவர் சமூகம் பல்வேறு செயற்பாடுகள் மூலம் ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பல்வேறு துறைகளில் இலங்கைக்குத் தென்கொரியாவிடமிருந்து உதவிகள் கிடைப்பதாகவும், தென்கொரிய பல்லைக்கழகங்களின் மாணவர்கள் தன்னார்வமாக முன்வந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடையும் என்றும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். இவ்வாறு முன்வந்துள்ள தென்கொரிய மாணவர்களுக்கு இலங்கை சார்பில் பிரதி சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்தத் தென்கொரிய மாணவர்கள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவை சந்திப்பதற்காக பாராளுமன்றத்திற்கு வந்த போது அவர்களுடன் செமால் பவுண்டேஷன் இலங்கையின் வதிவிட இயக்குனர் Choi Sung Woo மற்றும் தென் கொரியாவில் உள்ள செமால் அறக்கட்டளையின் பிரதான அலுவலக அதிகாரி Min Sung Ho ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தென்கொரியாவின் சாமுவேல் அறக்கட்டளையினால் (Saemaul Fundation) இந்த தன்னார்வ நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியனவும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

 

2 11

13 16

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom