இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

திகதி : 2022-03-22

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டின் போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுரகுமார திசாநாயக ஆகியோர் வாக்கெடுப்பைக் கோரியிருந்தனர். இதற்கமைய இரண்டாவது மதிப்பீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டதுடன், இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டு 51 மேலதிக வாக்குகளால் இரண்டாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் குழு நிலையின்போது சில சரத்துக்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன், சட்டமூலம் மூன்றாவது மதிப்பீட்டின்போது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றம் இன்று மு.ப 10.00 மணிக்குக் கூடியதுடன், “மிடைக்கட்டண வரி” சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர்  கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய சபையில் அறிவித்தார்.

அத்துடன், அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புலமைச் சொத்து (திருத்தம்) சட்டமூலம், தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு, வேலையாட்கள் நட்டஈடு (திருத்தம்) மற்றும் காணி அபிவிருத்தி (திருத்தம்) ஆகிய  சட்டமூலங்கள் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்ததுடன், மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி சட்டமூலம் குறித்த விவாதம் நடைபெற்றது.

அதன் பின்னர், 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்போது நாட்டிற்கு தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் தரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேஷா விதானகே, எரிசக்தி அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே அவர்களிடம் கேள்வியெழுப்பினார். அத்துடன், குளங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் ஆறுகளில் அங்கீகரிக்கப்படாத நிர்மாணங்களை தடுப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பா பண்டார, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ நாலக கொடஹேவாவிடம் கேள்வியெழுப்பினார். கேள்விகளுக்குப் பதில் வழங்கப்பட்டதும் பாராளுமன்றம் நாளை (23) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom