இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இன்றைய பாராளுமன்ற அமர்வு - 2022.02.23

திகதி : 2022-02-23

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு பாராளுமன்ற நூலகத்தில் - கௌரவ சபாநாயகர் அறிவிப்பு

 

  • புலமைச் சொத்து (திருத்தம்) சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு
  • எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ஒத்திவைப்பு விவாதம் பி.ப. 5.30 மணி வரை

 

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்கள் அடங்கிய (87) தொகுப்புகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக பாராளுமன்ற நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அந்த ஆணைக்குழுவின் சாட்சியங்கள் அடங்கிய 87 தொகுதிகள் 2022.02.22 ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்டவை என்றும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சபையின் விசேட அனுமதியுடன் சிங்களம்  மற்றும் ஆங்கில மொழிகளில் 2021.02.25 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

இதேவேளை, பொலன்னறுவை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரொஷான் ரணசிங்க சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணை சபை முதல்வர் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் இன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து இதனை வழிமொழிந்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் “சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் இன்று மு.ப. 10.00 மணிக்கு கூடியதுடன், மு.ப. 11.00 மணி முதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது 2003 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தை திருத்துவதற்கு புலமைச் சொத்து (திருத்தம்) சட்டமூலம் சபை முதல்வரும் அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது.  

சட்டமூலத்தை கீழே உள்ள இணைப்பில் பார்வையிடவும்
http://documents.gov.lk/files/bill/2022/2/181-2022_T.pdf

அதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரான் விக்கிரமரத்ன அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்ததுடன் பி.ப. 5.20 வரை இடம்பெற்ற விவாதத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர். அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் கூட்டநடப்பெண் குறித்து கேள்வியெழுப்பியதுடன், போதிய கூட்ட நடப்பெண் இல்லாமையால் பாராளுமன்றம் நாளை (24) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom