PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

பாராளுமன்ற அலுவல்களின் ஒழுங்கு

பாராளுமன்ற அலுவலானது 22 ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளுக்கமைய பின்வரும் ஒழுங்கில் நடாத்தப்படும்.

 

1.

புதிய உறுப்பினர் ஒருவரால் செய்யப்படும் உத்தியோகபூர்வ
சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம்இது கௌரவ சபாநாயகரினால் நடத்தி வைக்கப்படும்.

2.

ஜனாதிபதியின் செய்திகள்
ஜனாதிபதியிடமிருந்து வந்த செய்திகள் கௌரவ சபாநாயகரால் அல்லது பிரதிச் சபாநாயகரால் அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளரால் அல்லது தலைமைதாங்கும் உறுப்பினரால் வாசிக்கப்படும்.

3.

சபாநாயகரின் அறிவித்தல்கள்
சட்ட மூலங்கள் பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள், சட்ட மூலங்களின் உறுதிப்படுத்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் மரணம், தவிசாளர் குழாமில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், குழுக்களின் நியமனம் போன்ற பாராளுமன்றத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்கள் பற்றிய அறிவித்தல்களும் கௌரவ சபாநாயகரால் மேற்கொள்ளப்படும்.

4.

பத்திரங்கள் சமர்ப்பித்தல்
கௌரவ சபாநாயகரால் அல்லது ஓர் அமைச்சரால் அல்லது ஒரு பிரதி அமைச்சரால் மட்டுமே பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட முடியும்.

5.

குழுக்களின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்றக் குழுக்களின் அறிக்கைகளை அந்தந்தக் குழுக்களின் தவிசாளர் சமர்ப்பிப்பார். ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் அந்தந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் சமர்ப்பிக்கப்படலாம்.

6.

மனுக்கள்
பிரசைகள் தமது நிருவாக ரீதியான இடர்ப்பாடுகளுக்குப் பரிகாரம் தேட, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரூடாகப் பாராளுமன்றத்திற்கு மனுக்கள் சமர்ப்பிக்கலாம். அவ்வாறான மனுக்கள் பரிசீலனைக்காகப் பொது மனுக்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

7.

கேள்விகள்
கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம அமைச்சரிடமோ அல்லது யாரேனும் ஓர் அமைச்சரிடமோ பொது விடயங்கள் தொடர்பாக குறித்த அமைச்சின் கீழ்வரும் விடயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் வாய்மூல வினாக்களை முன்வைக்கலாம். உறுப்பினர் ஒருவர் நாளொன்றுக்கு மூன்று வாய்மூல வினாக்களை மட்டுமே கேட்கமுடியும். வினாவுக்கான நேரம் பி.ப. 01.00 முதல் பி.ப. 02.00 வரையாகும்.

8.

சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதி கோரும் பிரேரணைகள்
தொடர்ச்சியாக மூன்று மாத காலத்திற்கு விடுப்பை வேண்டும் யாரேனும் ஓர் உறுப்பினர் அதற்கான சபையின் அனுமதியைப் பெறவேண்டும். அரசியலமைப்பின் உறுப்புரை 66(ஊ) இன் கீழ், சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதி கோரும் பிரேரணையொன்று குறித்த உறுப்பினரின் வேண்டுகோளின் பேரில் யாரேனும் ஓர் உறுப்பினரால் சபையில் பிரேரிக்கப்படலாம். இப்பிரேரணை அமைச்சர் ஒருவரால் சபையில் பிரேரிக்கப்படாதவிடத்து, வழிமொழியப்படல் வேண்டும்.

9.

அமைச்சு சம்பந்தமான கூற்றுக்கள்
பொது முக்கியத்துவம் மற்றும் கொள்கை தொடர்பான விடயங்கள் பற்றியும், தமக்குப் பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சு சம்பந்தமாக, சபையில் முன்வைக்கப்பட்ட தவறான தகவல் ஒன்றை சபையின் முன் திருத்துவதற்கும் அமைச்சு சம்பந்தமான கூற்றுக்கள் அமைச்சர்களால் விடுக்கப்படும். அமைச்சு சம்பந்தமான இக் கூற்றுக்களை மேற்கொள்ள கௌரவ சபாநாயகரின் முன் அனுமதி தேவை. கூற்றினை விடுக்கும் வேளையில் கேள்விகள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டா. ஆனால் அடுத்து வரும் ஒரு தினத்தில் இது பற்றிய விவாதமொன்றுக்கு அனுமதியளிக்கப்படலாம்..

10.

தனிப்பட்ட விளக்கங்கள்
சபையில், தனக்கெதிரான குற்றச்சாட்டொன்று கொண்டுவரப்படுகையில் அல்லது பாராளுமன்ற நிகழ்வு பத்திரிகையில் தவறான விதத்தில் அறிக்கை செய்யப்படுகையில், எவரேனும் ஓர் உறுப்பினர் தனிப்பட்ட விளக்கமொன்றை அளிக்க முடியும். தனிப்பட்ட விளக்கங்கள் பாதிக்கப்பட்ட உறுப்பினரால் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறான விளக்கங்கள் அளிக்கப்பட முன்னர், உறுப்பினர்கள் கௌரவ சபாநாயகரின் அனுமதியைப் பெறவும் வேண்டும்.

11.

சிறப்புரிமைக் கேள்விகள்
22ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் உறுப்பினர் ஒருவர் உரிய அறிவித்தலைக் கௌரவ சபாநாயகரிடம் அளித்ததன் பின்னர் சிறப்புரிமை விடயம் ஒன்றைச் சபையில் எழுப்பலாம். ஆயினும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குறித்த அவசர பிரேரணையொன்று மற்றெல்லா அலுவல்களையும் விட முன்னிலை வகிக்கும். சிறப்புரிமை விடயமொன்றை எழுப்புவதற்காக சபையின் நடைமுறைகள் எந்த ஒரு நேரத்திலும் குறுக்கீடு செய்யப்படலாம்.

12.

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போதான முன்னறிவித்தல் தேவைப்படாத பிரேரணைகள்
அமர்வு நேரங்களில் மாற்றம் செய்தல், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தல் மற்றும் சிறப்புரிமை விடயமொன்றைச் சிறப்புரிமைகள் குழுவுக்கு சமர்ப்பித்தல் போன்ற பிரேரணைகளுக்கு முன் அறிவித்தல் தேவையில்லை. அத்துடன் அவ்வாறான பிரேரணைகள் பாராளுமன்றச் சபைத் தலைவரால் அல்லது அரசாங்க முதற்கோலாசானால் அல்லது அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் பிரேரிக்கப்படவேண்டும்.

13.

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போதான முன்னறிவித்தல் தேவைப்படும் பிரேரணைகள்
பொதுவாக, பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்களுக்கு அறிவித்தல் தேவை. அரசாங்கச் சட்ட மூலங்கள் தனியார் உறுப்பினர் சட்டமூலங்களுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்கப்படும்.

14.

அனுதாபப் பிரேரணைகள்
மரணமடையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அனுதாபப் பிரேரணைகளை நிறைவேற்றும் பொருட்டுச் சபையினில் ஒரு நாளை ஒதுக்குவது பாராளுமன்ற நடைமுறையாகும். அனுதாபப் பிரேரணைகளுக்குக் குறித்த கால எல்லை எதுவும் கிடையாது.

15.

பொது அலுவல்கள்
அறிவித்தல் வழங்கப்பட்டதும் குறித்த ஒரு தினத்திற்கான ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதுமான அனைத்து விடயங்களும் “பொது அலுவல்களில்” அடங்கும். சட்ட மூலங்கள், பிரேரணைகள், ஒழுங்கு விதிகள், குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் போன்றவை இவற்றில் அடங்கும்.

Share This On

Last Updated on 11-07-2024

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom